October 1, 2010

எந்திரன் - திரை விமர்சனம்

என் ப்ளாக் வரலாற்றிலயே முதன் முறையாக திரை விமர்சனம் எழுதியிருக்கேன். திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதவே கூடாது என்கிற என் எண்ணத்தை எந்திரன் திரைப்படம் உடைத்தெறிந்துவிட்டது.அதற்கு முதல் காரணம் ஆஸ்தான டைரக்டர் ஜென்டில் மேன் ஷங்கர்தான் ...

தயாரிப்பு நிறுவனம் , படத்தில் நடித்தவர்கள்,இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் ஃபேமஸ் ஸ்டார்ஸ் அறிமுகமே வேண்டியது இல்லை,



இந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களின் இதய துடிப்பை கடந்த சில நாட்களாகவே எகிறவைத்து கொண்டிருக்கும் எந்திரன் திரைப்படத்தில் நிச்சயம் கொடுத்த பணத்திற்கும் மேலாகவே படத்தில் பணி புரிந்திருக்கும் அனைவரும் தங்கள் உழைப்பை கொட்டியுள்ளனர்.


கதை


மனிதன் இட்ட கட்டளைப்படி இயங்கும் ரோபோ தன்னுடைய சிந்தனைகளின் படி இயங்க ஆரம்பித்தால், ரோபோக்களுக்கும் மனிதனைப்போல உணர்ச்சிகள் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் இதுதாங்க படத்தோட ஒன்லைன்...


ரஜினி


ஆர்ப்பாட்டமே இல்லாத அறிமுக காட்சி பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் கிடையாது படத்தில், விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜினி என இருவேடங்கள் சூப்பர்ஸ்டாருக்கு. வயசானாலும் இன்னும் இவரோட ஸ்டைலும் வேகமும் இவரைவிட்டு இன்னும் போகவே இல்லை . ஷங்கர் என்னும் விஞ்ஞானியிடம் சிக்கிய ரோபோவாக தன்னுடைய ஸடைலில் நகைச்சுவை,வில்லத்தனம் கொஞ்சம் காதல் என கலந்து அசத்தியிருக்கிறார் மனிதர்.குறிப்பாக இடைவெளிக்கு பிறகு வரும் வில்லத்தனமான நடிப்பு அட்டகாசம்.ரோபோ போலவே டான்ஸ் ஆடுவது இன்னும் அட்டகாசம் .இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை திறமைகளையும் அட்டாகாசப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ரோபோவாக வரும் ரஜினியின் நகைச்சுவைக்காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது.முக்கியமாக ட்ராஃபிக் போலீஸிடம் ரோபோ ரஜினி வரும் ஐந்து நிமிடமும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் காமெடியில். ட்ரெயின் சண்டைக்காட்சி பிரம்மிக்கவைக்கிறது.ஒரே ஒரு குறை இந்தபடத்தில் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் சீன்கள், பஞ்ச் டயலாக்ஸ் மிஸ்ஸிங்...கிளி மாஞ்சாரோ பாடலில் சூப்பர் ஸ்டார் கொள்ளை அழகாய் இருக்கிறார்...


தான் உருவாக்கிய ரோபோவினை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என ரோபோட்டிடம் ஒரு அறிவாளி கேட்க அதற்கு ரோபோ ரஜினி கடவுள்ன்னா யார் என்று திருப்பி கேள்விகேட்க மனிதரைப் படைத்தவர்தான் கடவுள் என்கிறார் கேள்வி கேட்டவர் அப்போ என்னைப்படைத்தது இந்த வசீகரன் (விஞ்ஞானி ரஜினி) எனும் கடவுள் இருக்கிறார் என்னும்போது தியேட்டரில் விசில் சத்தம் அடங்க வெகு நேரமானது.










ஷங்கர்


இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் , ஃபேண்டசி எனும் ப்ராம்மாஸ்திரத்திரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் பிரம்மா இந்தப்படத்திற்க்கும் தன்னுடைய பிரம்மாண்டம் எனும் அஸ்திரத்தையும்,  ரஜினி எனும் நடிப்புலக பிரம்மாண்டத்தையும் வைத்து ஒரு ஆர்ட்டிஃபிகல் இண்டெலிஜெண்ட் திரைப்படத்தை காமெடி , காதல், கிராபிக்ஸ் கலந்து கொடுத்து தமிழ் சினிமாவை ஒருபடி மேலே எடுத்துசென்றிருக்கிறார் .





"விஞ்ஞானக் கதை என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்கவேண்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தப்பு. விஞ்ஞானக் கதை என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது" இது நம்ம சுஜாதா சார் சொன்னது அதையேதான் திரு சுஜாதா சார் அவர்களின் கதையை , ஷங்கர் தன்னுடைய டெக்னிக்கல் மூளையையையும் சூப்பர்ஸ்டார் எனும் பிரம்மாண்ட நடிகரையும் சரியாக பயன்படுத்தி ஒரு முழு நீள எண்டெர்டெயின்மெண்ட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.. இந்தப்படத்தில் ஆரம்ப காட்சிகளில் விஞ்ஞானி ட்ரஜினி ரோபோ ரஜினிக்கு கார் ஓட்டக்கற்று கொடுக்கும் காட்சியில் பின்னாடியும் பார்த்து வண்டி ஓட்டுடா என்று சொல்லும் போது ரோபோட் தன் தலையையே கழுத்துபக்கம் முழுதும் திருப்பி பார்த்து வண்டி ஓட்டுவதிலிருந்து ஐஸ்வர்யா ராயை கடித்த கொசுவுடன் ரோபோ ரஜினி பேசி ஐஸ்வர்யாராயிடம் சாரி கேட்பதிலிருந்து கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோவே அதன் பாகங்களை கழட்டி வைப்பது வரை படம் முழுதும் இவரின் டச்...





ஐஸ்வர்யா ராய் 


ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு இணையான கேரக்டர், படத்தின் திருப்பு முனை காட்சிகள் ஐஸ்வர்யாவை சுற்றியே நடக்கிறது . ரோபோ ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து வரும் காதல்காட்சிகள் ரசனை. 35 வயசான என்ன ? என்ன இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்தான்யா . ரோபோ ரஜினிக்கு தன் மீது வரும் ஒரு விதமான ஈர்ப்பு பின் அது தவறென ரோபோ ரஜினிக்கு புரியவைக்கும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த 50கிலோ தாஜ் மஹால்.கிளிமாஞ்சாரோ பாடலில் இவர் போடும் டொட்ட்ட்டாய்ங்களுடன் நம்மளையும் டொட்டாய்ங்க் போடவைக்கிறார். அதிர்ஷ்டக்கார ஆளுதான் அபிஷேக் பச்சன். 





ஒளிப்பதிவு 

கிளிமாஞ்சாரோ,காதல் அணுக்கள் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட லொக்கேசன்களும் கண்ணுக்கு விருந்து , சண்டைக்காட்சிகளில் ரத்னவேலுவின் கேமராவும் அட்டகாசம் .

இசை

பூம் பூம் ரோபோடா இந்த வருடம் குழந்தைகளின் விருப்பப்பாடல்களாக மாறப்போவதில் ஆச்சரியமில்லை . புதிய மனிதா , கிளி மாஞ்சாரோ பாடல்களும் கேட்க கேட்க இனிமையாய் இருக்கின்றது. பின்னணி இசையிலும் விளையாடியிருக்கிறார் இசைப்புயல்.இன்னும் ரோபோக்கள் துப்பாக்கி சுடும் சண்டைகாட்சிகளில் வரும் சத்தம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா ....

கிராபிக்ஸ் காட்சிகள்

இந்த திரைப்படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு இணையான தரத்துடன் பிரம்மிக்க வைக்கின்றன.கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளிலும் ரயிலில் ரஜினி போடும் சண்டைகாட்சிகளிலும் ஒரே மாதிரியான பல ரோபோ ரஜினி டான்ஸ் அண்ட் சண்டையிடும் காட்சிகளுக்கு மட்டுமே நாம் வாங்கிய டிக்கெட் சரியாப்போச்சு...




மொத்தத்தில் இந்த எந்திரன் ஒரு நொடி கூட சலிப்பைத்தராத முழு நீள எண்டெர்டெயின்மெண்ட் திரைப்படம் , கண்டிப்பா குடும்பத்தோடு சந்தோஷமாக பார்க்கலாம்..

எந்திரன் - தியேட்டர்காரர்களுக்கு இந்திரன்...


/