March 24, 2011

Be Careful - காதல் அணுகுண்டுகள் இருக்கின்றன


பூமிப்பந்தில் பிறந்த அழகிகளுக்கு
மத்தியில் நீயோ அழகுப்பந்தில்
பிறந்த பேரழகி..!



உன்னை சுண்டினால் 
இரத்தம் வருமோ வராதோ
தெரியாது ஆனால் அழகு வரும்..!






என் இதயத்தில் 
ஓட்டை விழுவதற்கு பதில்
நீ விழுந்துவிட்டாய்..!





உனக்கு சிறுவயதில் 
காது குத்துவதற்கு பதில்
அழகை குத்திவிட்டார்கள் போல
அழகை உரித்து வைத்திருக்கிறாய்..!




தராசு தட்டிலிருக்கும் எடைக்கற்கள்
எடையை அளக்கும் என்றால்
என் மனதட்டிலிருக்கும் காதல்கற்கள்
உன் இடையை அளக்கிறது..!




உன்னிடம் என் கோபம்
பணிவன்புடன் இருப்பதற்கு
காரணம் உன் ஆணவம்
அழகன்புடன் இருக்கிறது...!



பிரம்மன் உன்னை 
வரையும் பொழுது அன்புடன் என்று 
ஆரம்பித்திருப்பான் போல 
அதுதான் நீ அன்போவியமாய் இருக்கிறாய்...!



சிலருக்கு பிளட் கேன்சரோ
பிரெயின் கேன்சரோ வரும்
எனக்கு ஹார்ட் கேன்சர்
வந்திருக்கிறது நீதான் காரணம்..!



சாயம் போன சேலைக்கு
வர்ணம் பூசுவதைப்போல
காயமான மனதுக்கு 
அன்பை பூசுகிறாய் நீ..!



என்னை இஞ்சி தின்ற மங்கி 
என்ற உன்னிடம் இல்லையில்லை
உன்னைக்கொஞ்சி தின்னும் பக்கி 
என்கிறேன் நான்..!



சத்தியமா இந்த போஸ்ட்டுக்கு இவங்கதான் காரணம்

March 23, 2011

ப்ரியமானவள்..!

நீ எப்படி இருப்பாய் எந்த வடிவில் இருப்பாய் என்றெதுவும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு பிடித்தவிதமாய்த்தான் இருப்பாய் என்றொரு கிளி மனமரத்தினடியில் இருந்து ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறது . அந்தக்கிளியிடம் உன்னைப்பற்றி கேட்கும்பொழுதெல்லாம் அவளொரு பேரழகி என்ற பதில் மட்டுமே சொல்கிறது. எனக்கே தெரியாத உன்னைப்பற்றி இந்த மனமரக்கிளி இப்படி அடித்து கூறுவதன் ரகசியம் விளங்கவில்லை என்றபொழுதும் பேரழகிக்கு மணவாளனாய் ஆகப்போவதை நினைத்து மனது வானவில்வண்ண விளக்காய் பூரித்துதான் போகிறது.

ஒரு வேளை இந்தக்கிளி கூறுவதெல்லாம் பொய்யாய் போய்விடுமோ என்று அஞ்சி நடுநிசி இரவுகளில் உறக்கம் கலைந்து விடுகிறது. உறக்கத்துடன் ஒரு பிரசங்கம் நடத்தி வெற்றி பெற்று வந்த கனவின் ஆரம்பம் வெகு சுவாரஸ்யமாய் ஒரு புதிருடன் ஆரம்பித்தது. கனவின் புதிராய் நீ முக மூடியணிந்து என் மீது நீல நிற உடையுடுத்தி படர்ந்திருக்கிறாய், என் முதுகுப்புறம் சில வளர்பிறை நிலவுகள் புதிதாய் உதயமாகியிருக்கின்றன, முகத்தில் முழுநிலவுகள் இரண்டு உன்னிலிருந்து என்னில் இடம் மாறியிருக்கின்றன. இதையெல்லாம் மறுநாள் காலை என் வீட்டு அழகப்பன்  என்னிடம் காட்டியபொழுது என் மீசைக்குள் வெட்கம் குடிகொண்டது. இவ்வளவு நடந்தும் எனக்கான உன் முகத்தை காணவே முடியவில்லை என்ற பொழுது மீசையிலிருந்த வெட்கத்தை துரத்தி துயரம் குடிகொண்டது, கனவும் கலைந்தது.

முன்தினம் வந்த கனவை பற்றியும் உன்னை பற்றியும் எப்பொழுதும்போல் வண்ணத்துப்பூச்சியிடம் பகிர்ந்துகொண்டபொழுது, கவலைப்படாதே உன் ஆசைக்குரியவளை நான் காட்டுகிறேன் என்னுடன் வா என்று என்னை ஒரு பூங்காவனத்திற்கு அழைத்துச்சென்றது. பூங்காவனத்தில் புதுமலர்கள் பூத்துகுலுங்கி கொண்டிருந்தன ஒரே ஒரு மலர் மட்டும் பூத்து சிரித்துக்கொண்டிருந்தது அது என்ன மலரென்று பார்ப்போமென்று அருகில் சென்றால் அது நீ, எப்பொழுதுபோலவே முகம் காட்டாமல் கண்ணாமூச்சியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாய் நீ. அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியோ உன்னைக்காட்டி இவள்தான் உன் தேவதைப்பூ எடுத்துக்கொள் என்றது, முதல் முறை ஒரு மலர் எப்படி வெட்கப்படும் என்பதை நீ விளங்க வைத்துக்கொண்டிருந்தாய், சில நொடிகளில் மாயமாய் மறைந்தும் போனாய்.


இந்த முறை உன்னைப்பற்றிய ஏமாற்றம் விரக்தி இரண்டும் பன்மடங்கு பெருகியது . சதா சர்வ காலமும் உன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் முகத்தில் ரோமங்கள் தன் உச்சகட்ட வளர்ச்சியை காட்டி என்னை நோயுற்றவனாய் காட்டிக்கொண்டிருந்தது. நோய் முற்றிய நிலையிலிருப்பவானாய் நினைத்து, என்னை பார்த்து பரிதாபப்பட்ட காதல் வைத்தியன் ஒருவன் வந்து என்னை கைத்தாங்கலாய் நீயிருக்கும் பூவனதேசத்திற்கு அழைத்துச்சென்றான். இம்முறை நீ உன் சக தோழியருடன் கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்தாய் , லாவகமாய் பந்தை யாரிடமும் கொடுத்துவிடாமல் வலைக்குள் நீ அடித்த நேரம் சரியாய் என் உச்சி மண்டையில் நங்கென்று வலித்தது, வலைக்குள் விழுந்த பந்தை உற்றுப்பார்த்தபோது நீ விளையாடிக்கொண்டிருந்த கால்பந்து என் தலையாகவா இருக்க வேண்டும்?, நீ ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருக்கிறாய் உடன் வந்த காதல் வைத்தியன் ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருந்தான் பிறகுதான் தெரிந்தது அவன் உன்னால் நியமிக்கப்பட்ட காதல்தொண்டன் என்று.

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் எதுவுமே பேசாமல் கிறுக்கு பிடித்து திரிவதை விட உன்னிடமே உன்னைப்பற்றி கேட்டுவிடலாமென்று தைரியமாக உன் அருகில் வந்து ஏய் கந்தர்வப்பெண்ணே யார் நீ என்றதும், சட்டென்று திரும்பி பார்த்த நீ மெல்லிய புன்னகையை பதிலாய் தந்துவிட்டு சிறிது தூரம் சென்றது ஒரு காகிதப்பந்தை என்னிடம் விசிறிவிட்டு சென்றாய். பித்து பிடித்த மனம் ஆவலாய் அதைப்பிரித்து படித்தது , அதில்

ப்ரியமானவனே..


உனக்கென்று பிறந்தவளே நான் உன்னை அடைவதற்கு முன் இந்த மலர் வனதேசத்திலிருக்கும் மலர்களின் தோழியாய் சிலகாலம் நியமிக்கப்பட்டிருக்கிறேன் இந்த மலர்களின் மனத்தையெல்லாம் வென்று அவற்றின் நறுமணத்தையும், அழகையும், பொறுமையையும்,  எனக்குள் உள்வாங்கி அழகும் வனப்பும் மிகுந்த பேரழகியாய் மாறியதும் உன்னிடம் வந்து உன் துன்பங்களை விலக்கி இன்பங்களை தருவேன் , அதுவரை இப்படி கிளியிடமும், வண்ணத்துப்பூச்சியிடமும் பேசிக்கொண்டு அரைப்பைத்தியமாய்த் திரியாமல், என்னை அடக்கி ஆளும் வலுக்களை உனக்குள் தயார்படுத்தி வை , உடம்பிற்குள் ஒராயிரம் தினவை புதைத்து வை நான் வந்து அவற்றிற்கு உயிர்கொடுக்கிறேன், உன் வீட்டிலிருக்கும் மலர்களிடம் சொல்லிவை அவைகளின் தோழி ஒருத்தி வரப்போகிறாளென்று, உன் வீட்டாரிடம் சொல்லிவை அவர்களின் மனத்தை ஆளப்போகும் இளவரசி வரப்போகிறாளென்று, அதுவரை சமர்த்தா இருக்கணும் இளவரசே....



ப்ரியமானவள்..


Inspiration of this Post :- நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாக தருவாயா?

March 18, 2011

இருவார்த்தை கதைகள் - 5

தலைப்பு : ஃபால்ஸ் ஸ்டேட்மெண்ட்

கதை : ரியல் எஸ்டேட்

*************************************************

தலைப்பு : அரைக்கை சட்டை

கதை : பிறவி ஊனம்

*************************************************

தலைப்பு : நடத்துனரிடம் பிச்சைக்காரன்

கதை : சில்லரை இல்லைப்பா

*************************************************

தலைப்பு : உடைந்த எலும்புகள் பேசிக்கொண்டன

கதை : பிரிவோம் சந்திப்போம்

*************************************************

தலைப்பு : டீக்குள் ஈ


கதை : ஸ்பாட் அவுட்

*************************************************

தலைப்பு : வயிற்றில் ஒரு ஏணி

கதை : சிக்ஸ் பேக்

*************************************************

தலைப்பு : புல்லாங்குழல்

கதை : செத்துப் பிழைத்தவன்

*************************************************

தலைப்பு : உயிருடன் கட்டப்பட்ட சமாதிகள்

கதை : முதியோர் இல்லம்

*************************************************

தலைப்பு : பைனான்ஸ் கம்பெனி முதலாளி

கதை : ஓடியோடி உழைக்கணும்

*************************************************

தலைப்பு : டாஸ்மாக்

கதை :  குடியிருக்கும் கோவில்

*************************************************




March 14, 2011

நான் வாங்கிய நான்கு டிகிரிகள்...!

ஆக்சுவலா என்னோட பெயர்புராணம் சொல்லணுமா என்ன? எதுவும் சொல்லாமயே உங்களுக்கெல்லாம் விளங்கியிருக்கும் ஆனாலும் சொல்லியே ஆகணும்ன்னு என் உடன்பிறப்பு சுசி சொன்னதால இப்போ சொல்றேனுங்கோ..!

வசந்தகுமார் என்று எங்கப்பாதான் எனக்கு பெயர் வைத்தார்.வசந்தகாலத்தை குறிக்கும்படியாக இருக்கட்டுமே என்று அவர் நினைத்திருகலாம். ஆனால் என் வாழ்க்கையில் இன்னும் வசந்தகாலம் வந்தபாடில்லை . இந்த கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் ஒன்று பிச்சைக்காரர்களாக இருப்பார்கள் இல்லையென்றால் மிகவும் ஏழ்மையாக இருப்பார்கள் இருப்பார்கள், அதேபோல குபேரன் என்று பெயர் வைத்தவர்கள் வீட்டில் பணப்பிரச்சனையாக இருக்கும் , சாந்தி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் அடாவடியாக இருப்பார்கள் , அழகேசன் என்று பெயர் வைத்தவர்களின் முகம் அஷ்டகோணலாக இருக்கும், வீரலட்சுமி என்று பெயர் வைத்தவர்கள் கோழையாக இருப்பார்கள், ஆண்டியப்பன் என்று பெயர்வைத்தவர்கள் பணம்படைத்தவர்களாக இருப்பார்கள் அதுமாதிரி நமக்கு என்ன பெயர் வைக்கிறார்களோ அதற்கு எதிர்மறையாகத்தான் நடக்கும் என்பது எழுதப்படாத விதி...அதேபோலவே எனக்கும் .

பெயரில் இருக்கும் பொருள் ஒரு சிலருக்கு மிகச்சரியாக நடப்பதும் உண்டு முருகன் என்று பெயர் வைத்தவர்களுக்கு இரு தாரம் அமைவது, விக்னேஷ்வரன் என்று பெயர் வைத்தவர்களுக்கு தொப்பை இருப்பது, ( இது இரண்டுமே நான் நிஜத்தில் பார்த்தது ) , ஆனா அதுமாதிரி எல்லாருக்கும் நடந்துவிடுவதில்லையே என்ன செய்ய ?...!

உண்மைப்பெயர்களுக்கடுத்தபடியாக நமக்கு நம் சுற்றம், நட்புகளால் வைக்கப்படும் பட்டப்பெயர்கள் நம்முடைய சுயரூபத்தை குறிப்பதாக இருக்கும். எங்கள் ஊரில் பெரும்பாலானோருக்கு அவர்களின் உண்மைப்பெயரே மறந்துவிடும் அளவிற்க்கு பட்டப்பெயர்கள் நிலைத்துவிடும். உதாரணத்திற்கு ஊரில் பிரபல சம்சாரி ஒருவரின் பெயர் ''முட்டைபிடுங்கி'' சிரிப்பு வருகிறதா, ஆம் அவரின் அப்பாவோ தாத்தாவோ கோழி முட்டையிடுவதற்கு முன்பே அந்த முட்டையை பிடுங்குவது போன்ற அவசரக்குடுக்கைகளாக இருந்திருக்கின்றனர் ஆதலால் அந்தப்பெயர் நிலைத்துவிட்டது. கொடுமை அந்தப்பெயர் தற்பொழுது இருக்கும் மூன்றாம் தலைமுறை வரையிலும் நீடிப்பதே...! இன்னும் அத்திமான் ராமசாமி, சித்தமான் ராமசாமி, கோமாளி ராஜாராம், பொட்டு வெங்கடேஷன், தாத்தி சீனிவாசன், சிங்கம் சீனிவாசன், இப்படி பல பட்டப்பெயர்கள் உண்டு அது எல்லாவற்றையும் எழுத இடம் போதாது.

அதுமாதிரியே எனக்கும் சின்ன வயதிலிருந்து நிறைய பட்டப்பெயர்கள் இருந்து வருகிறது. சுகுமாரை சுக்குகாப்பி, அழகேசனை அழுகினதக்காளி, அமுதக்குமாரை அமுல்டப்பா, என்று அவர்களின் பெயர் ஆரம்ப எழுத்தை வைத்து பட்டப்பெயர்கள் வைப்பது ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வழக்கம் . அதுபோலவே என்னுடைய பெயரில் இருக்கும் முதல் எழுத்தான வ வில் ஆரம்பமாகும் வத்தல், வத்தலக்குண்டு என்று இரண்டு பட்டப்பெயர்கள் மிகப்பிரபலமாக இருந்தது. பள்ளியில் என்னுடைய பெயரை வைத்து அழைப்பவர்களைவிட பட்டப்பெயரை வைத்து அழைப்பதையே வழக்கமாக்கிவிட்டனர். இன்னும் ஊர்ப்பக்கம் ஆரம்ப கால நண்பர்கள் பார்த்தால் செல்லமாக வத்தல் என்று அழைத்துவிட்டு நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள். 


இப்பொழுது தெரிகிறதா நான் ஏன் மிகவும் காரமாக இருக்கிறேனென்று ஹிஹிஹி...!

பிறகு என் அப்பத்தா எனக்கு ஒரு பட்டப்பெயர் வைத்தார் கிட்டத்தட்ட என் குடும்பத்தில் இருக்கும் சித்தப்பாக்கள் குடும்பம், அத்தைமார்கள் கூட்டம் அத்தனை பேரும் அழைக்கும் பெயர் குருவித்தலையன் ஹிஹிஹி . இந்த குருவித்தலையன் என்ற பெயர் பிறந்த கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. சிறுவயதில் முடிவெட்டிக்கொள்ளும்பொழுது முடி திருத்தினர் அவசரகதியில் பின் பக்கம் கழுத்தில் மட்டம் போட மறந்துவிடுவார் அது கீழேயிருக்கும்படி இருக்கும்..



படத்தில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடத்தில் குருவியின் வாய் நுனியைப்போன்று ஊசியாக நிறைய பேருக்கு இருக்கும் . எனக்கும் அதுபோலவே இருந்தது ஆனால் என் குடும்பத்தார்கள்தான் கிரியேட்டிவிட்டியானவர்களாச்சே என் அப்பத்தாவிற்கு தோன்றியிருக்கிறது பாருங்கள் குருவித்தலையன் என்று...

இன்னொரு பெயர் இன்னும் மிகப்பிரபலம் தேங்கா மண்டையன் என்ற பெயர் . எதிரிகளின் மண்டையை மண்டையை வைத்தே உடைப்பதால் சிறைச்சாலை படத்தில் தபு மோகன்லாலிடம் நெற்றியை டம்மென்று இடிப்பாரே அதுபோலவே எனக்கும் மற்றவர்களின் மண்டையை பதம் பார்ப்பதில் அலாதி விருப்பம் சிறுவயதில் . டம்மென்று முட்டினால் எதிரியின் கண்களில் கண்ணீர் வருமென்றால் எனக்கு சிரிப்பு வரும் . அவ்வளவு கனமான மண்டை என்னுடையது சிலருக்கு மண்டையினுள் மண் இருக்கும் என்றால் எனக்கு தேங்காய் இருக்கும் போல..! 



சிரிக்கப்படாது...! ச்சூ ச்சூ பார்டா திரும்ப திரும்ப சிரிக்கிறீங்க...!

....
பிறகு இப்பொழுது வேலை பார்க்கும் நிறுவனத்தின் சி இ ஓ வின் பெயரும் வசந்த குமார் என்பதால் சக ஊழியர்கள் ஜூனியர் சி இ ஓ என்று அழைப்பார்கள்.என்றைக்கு இது சி இ ஓவிற்கு தெரிந்து வேலைக்கு வேட்டு வைக்கப்போகிறாரோ தெரியாது.. இந்த பட்டப்பெயர்கள் பற்றியெல்லாம் எனக்கு சிறிதும் கவலையில்லை.இன்னும் என் சரிபாதி வந்து எனக்கு எத்தனை பட்டப்பெயர்கள் வைக்கப்போறாங்களோ? அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது ஆவ்வ்வ்...!


இவ்வளவு இருந்தாலும் அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும் இந்த வசந்து என்று எல்லாருக்கும் வராது வசந்த்ன்னு ஸ்டைலாத்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க ப்ரியமான நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே வசந்து என்று அழைப்பதுண்டு.

March 11, 2011

ஆயிரம் ரூபாயை வென்றது யார்?

சென்ற வார்த்தை விளையாட்டுப்போட்டிக்கான விடைகள்

வினா 1க்கான விடை



வினா 2க்கான விடை




வினா 3க்கான விடை




வினா 4க்கான விடை




வினா 5க்கான விடை



வினா 6க்கான விடை





வினா 7க்கான விடை




வினா 8க்கான விடை




வினா 9க்கான விடை



வினா 10க்கான விடை




வினா 11க்கான விடை




வினா 12க்கான விடை




வினா 13க்கான விடை




வினா 14க்கான விடை




வினா 15க்கான விடை




இந்த வினாக்கள் அனைத்திற்க்கும் சரியான விடையளித்து ரூ.1000க்கான புத்தகங்களை பரிசாக பெறுபவர் அருண்பிரசாத்..அவருக்கு டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் அவருக்கு வேண்டிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..



மேலும் முரளிக்குமார் பத்மநாபன் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார் அவர் 14 வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தார்..ச்சே சஸ்ட் மிஸ் மச்சி நேத்து ராத்திரி வரைக்கும் நீதான் வின்னர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் மச்சி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..! :(

மகேஷ்வரி மற்றும் மாரிமுத்து , கலாநேசன் ஆகிய மூவரும் 13 வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தனர்.. பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம் தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை..

மேலும் போட்டியில் கலந்து கொண்ட சுகுமார் சுவாமிநாதன், அமைதிச்சாரல் மேடம், பாலராஜன் கீதா, திவ்யாஹரி,வைகறை ஆகியோருக்கும் நன்றிகள்...!

கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றிபெற்றவர்கள் கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து மூளையை கசக்கியவர்கள் அனைவரும் போட்டியைபற்றி கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்தமுறையும் போட்டி நடத்தலாமா? வேண்டாமா என்பதையும் தெரிவித்து விடவும்..!


March 9, 2011

வார்த்தை விளையாட்டு - ரூ.1000 பரிசு

வழக்கமாக என்னுடைய பதிவில் இடம்பெறும் வார்த்தை விளையாட்டுப்போட்டிதான், ஆனால் இம்முறை வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டி

போட்டி மிகவும் எளிதானதுதான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரியைப்போன்றே கீழேயுள்ள 15 வினாக்களில் இருக்கும் படங்களை வைத்து பொருத்தமான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.விடை தமிழ் , ஆங்கிலம், தங்க்லீஷ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி -1



மாதிரி -2






மாதிரி -3






வினா-1



வினா-2




வினா-3





வினா-4




வினா-5





வினா-6





வினா-7





வினா-8





வினா-9





வினா-10





வினா-11





வினா-12




வினா-13





வினா-14





வினா-15




விதி முறைகள்

1.போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

2. விடைகளை வினாக்களுக்குரிய எண்களுடன் அளித்தால் போதுமானது. விடைகளை பின்னூட்டங்களில் மட்டுமே தெரிவிக்கவும். விடைகள் போட்டியின் இறுதியில் மட்டுமே பிரசுரிக்கப்படும்.

3. முதன் முறை தவறான விடைகள் அளிக்கப்பட்டிருப்பின், அவர் அளித்த விடைகளின் எண்களை குறிப்பிட்டு இது தவறு இது சரி என்று ஒரு முறை தெரிவிக்கப்படும். பிறகு ஒருமுறை விடையளிக்கலாம். மொத்தம் இரண்டு முறை விடையளிக்க வாய்ப்பு கொடுக்கப்படும்.போட்டி நடக்கும் நாட்கள் புதன், வியாழன், வெள்ளி.

4. அனைத்து விடைகளையும் கண்டுபிடிப்பவருக்கு புத்தக பரிசுத்தொகை முழுவதும் அளிக்கப்படும், இருவர் அனைத்து விடைகளையும் கண்டுபிடித்திருந்தால் புத்தக பரிசுத்தொகை 500, 500 ஆக பிரித்தளிக்கப்படும், இருவருக்கு மேல் சரியான விடைகள் கண்டுபிடித்திருந்தால் நாக் அவுட் முறையில் மேலும் சில புதிர்கள் கொடுக்கப்பட்டு இருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர். அனைத்து விடைகளுக்கும் யாருமே பதிலளிக்கவில்லையெனில் பெரும்பான்மையான கேள்விகளுக்கு யார் விடையளித்திருக்கின்றாரோ அவருக்கு பரிசு கிடைக்கும்.

5.பரிசுத்தொகைக்கான புத்தகம் இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பிவைக்கப்படும். தபால் செலவும் என்னுடையதே.தங்களுக்கு புத்தக நிலையத்தில் இருக்கும் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். வெற்றி பெற்றபின் புத்தகநிலையத்தை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி தரப்படும்.

6.போட்டிக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மாதம் ஒரு முறை நடத்தப்படும்.

7.போட்டி நேர்மையான முறையில் நடக்க தங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது.மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு ஐடியிலிருந்து மட்டுமே விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை.

8.கண்டிப்பாக நடுநிலைமையுடன் போட்டி நடத்தப்படும்.நான் எடுக்கும் முடிவே இறுதியானது.

9.போட்டி பற்றிய உங்கள் மேலான கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முந்தைய போட்டிகளை காண விரும்புபவர்கள் கீழேயுள்ள சுட்டியை சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.



                       வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு - 6


வாழ்த்துகள்,
நன்றி ,
வணக்கம்,

ப்ரியமுடன்...வசந்த்.